புதுடெல்லி: கடந்த சில நாள்களாக இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் காற்று மாசுபாடு படுமோசமான நிலையில் இருந்து வருகிறது.
தீபாவளித் திருநாளுக்குப் பிறகு அது மேலும் மோசமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து, ஒற்றைப்படை பதிவெண் கொண்ட தனியார் கார்கள் ஒற்றைப்படைத் தேதிகளிலும், இரட்டைப்படை பதிவெண் கொண்டவை இரட்டைப்படைத் தேதிகளிலும்தான் ஓட்ட வேண்டும் என்ற விதிமுறையை டெல்லி அரசு மீண்டும் அமல்படுத்த உள்ளது.
இம்மாதம் 13ஆம் தேதியிலிருந்து 20ஆம் தேதி வரைக்கும் அவ்விதிமுறை நடப்பில் இருக்கும்.
காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திங்கட்கிழமை பிற்பகலில் உயரதிகாரிகளுடன் கலந்துபேசினார். டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராயும் உயரதிகாரிகளும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கோபால் ராய், ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன், கட்டுமானம், கட்டட இடிப்பு தொடர்பில் எந்த விதிவிலக்கும் அளிக்கப்படவில்லை என்று கூறினார்.
முன்னர், இம்மாதம் 10ஆம் தேதிவரை தொடக்கப் பள்ளிகளை மட்டும் மூட உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், இப்போது 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான உயர்நிலைப் பள்ளிகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாள்களாகவே டெல்லியில் காற்று மாசுக் குறியீடு ‘500’ என்ற படுமோசமான நிலையை ஒட்டிய அளவிலேயே இருக்கிறது.
இதனால் பொதுமக்கள் பலரும் மூச்சுவிட முடியாமை, தொண்டை அழற்சி, கண் எரிச்சல் உள்ளிட்ட பிரச்சினைகளால் அவதிப்படுவது அதிகரித்துள்ளது. இத்தகைய பிரச்சினைகளால் நாள்தோறும் 25-30 பேர் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வருவதாக லோக் நாயக் மருத்துவமனை மருத்துவர் சுரேஷ் குமார் தெரிவித்தார்.
அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, டெல்லியில் அதிகக் காற்று மாசுள்ள இடங்களில் தீயணைப்புத் துறை நீரைப் பீய்ச்சி அடித்து, காற்று மாசைக் குறைக்க முயன்று வருகிறது.
நொய்டா, காஸியாபாத், குருகிராம், ஃபரிதாபாத் உள்ளிட்ட டெல்லியின் அண்டைப் பகுதிகளிலும் காற்று மாசுபாடு மோசமாகவே உள்ளது.
உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுப்பு
இதனிடையே, காற்று மாசுபாடு குறித்து மதிப்பிட்ட மாவட்ட அளவில் நிரந்தர வல்லுநர் குழுவை அமைக்க வேண்டும் என உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.
ஆனால், அது அரசாங்கத்தின் கொள்கை சார்ந்த முடிவு எனக் கூறி, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, அம்மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது.
“நாடு முழுவதும் மாவட்டந்தோறும் குழுக்களை அமைத்தால் மாசுபாடு சரியாகிவிடும் என நினைக்கிறீர்களா?” என்று நீதிபதிகள் மனுதாரரான அஜய் நாராயணராவ் கஜ்பாகரிடம் கேட்டனர்.