இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் இருந்து கத்தார் தலைநகர் தோஹாவிற்குச் சென்ற 6E-1736 என்ற இண்டிகோ விமானம், மருத்துவக் காரணத்திற்காக பாகிஸ்தானின் கராச்சி நகரில் அவசரமாகத் தரையிறங்கியது.
ஞாயிற்றுக்கிழமை (12-03-2023) இரவு 10.05 மணிக்கு அந்த விமானம் புதுடெல்லியில் இருந்து புறப்பட்டது. அங்கிருந்து நான்கு மணி நேரத்தில் தோஹா சென்றுவிடலாம் என்ற நிலையில், நள்ளிரவு தாண்டியதும் அவ்விமானம் கராச்சியில் தரையிறங்கியது.
விமானம் பறந்துகொண்டிருந்தபோது அதிலிருந்த பயணி ஒருவரின் உடல்நிலை மோசமானதையடுத்து, விமானம் கராச்சிக்குத் திருப்பிவிடப்பட்டது.
விமானம் தரையிறங்கியதும் விமான நிலைய மருத்துவக் குழு அவரைப் பரிசோதித்தது. ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவக் குழு கைவிரித்துவிட்டது.
இறந்தவர் நைஜீரியாவைச் சேர்ந்த திரு அப்துல்லா, 60, என அடையாளம் காணப்பட்டது.
தேவையான நடவடிக்கைகளுக்குப் பிறகு விமானம் மீண்டும் தோஹாவிற்குக் கிளம்பிச் சென்றது.