புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு திரிணாமூல் காங்கிரசைத் தொடர்ந்து சிவசேனை(உத்தவ் அணி) கட்சியும் ஆம் ஆத்மிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
டெல்லி தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராகக் கூட்டணி அமைத்து போட்டியிட்ட ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இந்த முறை தனித்தனியாகப் போட்டியிடுகின்றன.
இந்நிலையில், இந்தியா கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு யாருக்கு என்ற கேள்வி நிலவி வரும் சூழலில், ஆம் ஆத்மிக்குத் திரிணாமூல் காங்கிரசும், சிவசேனை உத்தவ் அணியும் ஆதரவு தெரிவித்துள்ளன.
சிவசேனை கட்சியின் செய்தித்தாளான சாம்னாவில் ‘ஹரியானா, மகாராஷ்டிராவைத் தொடர்ந்து தற்போது டெல்லி’ என்ற தலைப்பில் தலையங்கம் வெளியாகியுள்ளது.
”டெல்லி ஒரு யூனியன் பிரதேசம், அங்கு துணைநிலை ஆளுநருக்கு அதிகளவில் அதிகாரம் உள்ளது. ஆனால், அவர் இப்போது மத்திய உள்துறை அமைச்சின் முகவராகப் பணியாற்றி வருகிறார்.
“தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தவுடன் முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கான அதிகாரத்தைத் திரும்பப் பெற்றுள்ளார். அவர் பாஜகவுக்காக வேலை செய்வது மிகவும் ஆபத்தானது.
“வெளிப்படைத்தன்மையுடன் தேர்தல் நடத்துவதாக ஆணையம் கூறினாலும், மறைமுகமாக பாஜகவுக்கு ஆதரவான செயல்பாடுகள் நடக்கின்றன. டெல்லியில் வெற்றிபெற பாஜக எந்தளவுக்கு வேண்டுமானாலும் இறங்கும். மக்கள் விழிப்புடனும் கவனமாகவும் இருக்க வேண்டும்,” என்று தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.