புதுடெல்லி: சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை சஃப்தர்ஜங் மருத்துவமனையிலிருந்து மேதாந்தா மருத்துவமனைக்கு மாற்ற டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
‘நீட்’ மருத்துவ வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று இந்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, திரு வாங்சுக் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். அவரது பட்டினிப் போராட்டம் செவ்வாய்க்கிழமை (ஜுலை 21) 24வது நாளாகத் தொடர்ந்தது.
ஜூலை 18ஆம் தேதி சனிக்கிழமை காலை டெல்லி காவல்துறை அதிகாரிகளால் அவர் போராட்டக் களத்திலிருந்து வலுக்கட்டாயமாக டெல்லியின் சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
தொடர்ச்சியான உண்ணாவிரதத்தின்போது அவரது உடல்நிலை குறித்த கவலைகள் எழுந்ததை அடுத்து, சிறப்பு மருத்துவக் கவனிப்பிற்காகத் தனியார் மருத்துவமனைக்கு மாற்றக் கோரி வாங்சுக் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
அரசு நடத்தும் சஃப்தர்ஜங் மருத்துவமனையிலிருந்து மேதாந்தா மருத்துவமனைக்குச் செல்ல வாங்சுக்கிற்கு அனுமதி அளிக்க வேண்டும் எனக் கோரி, அவருடைய மனைவி கீதாஞ்சலி அங்மோ உயர் நீதிமன்றத்தை அணுகியிருந்தார்.
விசாரணையின்போது, வாங்சுக்கை மேதாந்தா மருத்துவமனைக்கு மாற்றுவதில் தங்களுக்கு எவ்வித ஆட்சேபமும் இல்லை என்று மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது. அதேவேளையில், அவர் தொடர்ச்சியான மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது.

