புதுக் கைப்பேசி வாங்கியதற்கு விருந்து தராத மாணவனைக் கொன்ற நண்பர்கள்

புதுக் கைப்பேசி வாங்கியதற்கு விருந்து தராத மாணவனைக் கொன்ற நண்பர்கள்

1 mins read
1135b777-8711-4dcb-b3f3-ebeb74843fed
சுற்றுக்காவல் சென்ற காவல்துறையினர், ஒரு சமோசா கடை அருகே ரத்தக்கறையைக் கண்டதைத் தொடர்ந்து, சிறுவன் கத்தியால் குத்தப்பட்ட விவரம் தெரியவந்தது. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

புதுடெல்லி: புதுக் கைப்பேசி வாங்கிய ஒன்பதாம் வகுப்பு மாணவன், தன் நண்பர்களுக்கு விருந்து வைக்காததற்காக கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் கிழக்கு டெல்லியின் சாக்கர்பூர் பகுதியில் திங்கட்கிழமை (செப்டம்பர் 23) நிகழ்ந்தது.

சச்சின் என்ற 16 வயது மாணவனைக் கொன்ற மூவரும், அவனுடன் பயின்ற மாணவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. அம்மூவரையும் காவல்துறை கைது செய்துள்ளது.

இரவு 7.15 மணியளவில் சுற்றுக்காவல் சென்ற காவல்துறையினர் அங்குள்ள ஒரு சமோசா கடை அருகே ரத்தக்கறையைக் கண்டனர்.

அதுகுறித்து விசாரித்தபோது, பதின்ம வயதுப் பையன்கள் சிலர் சண்டையிட்டதும் அவர்களில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதைக் கண்டதாகவும் சிலர் கூறினர்.

கத்தியால் குத்தப்பட்ட சச்சின் பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டான். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அவன் இறந்துவிட்டான்.

சச்சினும் அவனுடைய நண்பனும் புதுக் கைப்பேசி வாங்கியபின் வீடு திரும்பிக்கொண்டிருந்ததாகவும் அப்போது மற்ற மூன்று மாணவர்கள் அவர்களை வழிமறித்ததாகவும் காவல்துறை தெரிவித்தது.

அப்போது, புதுக் கைப்பேசி வாங்கியதற்காக அவர்கள் விருந்து கேட்க, அதற்கு சச்சின் மறுத்ததாகவும் அதனைத் தொடர்ந்து, அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, இறுதியில் அவன் கத்தியால் குத்தப்பட்டதாகவும் காவல்துறைத் துணை ஆணையர் அபூர்வா குப்தா விளக்கினார்.

கண்காணிப்புப் படக்கருவியில் பதிவான காணொளியின் துணையுடன் காவல்துறை அம்மாணவர்களை அடையாளம் கண்டு, கைது செய்தது. அவர்களிடமிருந்து ஒரு கத்தியும் கைப்பற்றப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
கைப்பேசிகொலைடெல்லிமாணவர்கள்