புதுடெல்லி: இந்தியாவின் 79வது சுதந்திரத் தின விழாவையொட்டி டெல்லி உச்சக்கட்ட பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்பட்டு உள்ளது.
வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) நாடு முழுவதும் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் இருந்தாலும் டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் கொண்டாட்டம் வரலாற்றுச் சிறப்புமிக்கது.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு செங்கோட்டை வட்டாரம் காவல்துறையின் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. அங்கு பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
செங்கோட்டையைச் சுற்றிலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அந்தப் பகுதியில் டிரோன்கள் பறக்க முடியாது. சிறுவர்கள் பட்டம் பறக்கவிட முடியாது. இதைப்போல ராட்சத பலூன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
டெல்லிக்குள் தேவையில்லாத போக்குவரத்து நெரிசல் மற்றும் எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்பட்டு விடக்கூடாது எனக்கருதி வணிக நோக்கத்துக்காக இயங்கும் வாகனங்களின் நுழைவுக்கு புதன்கிழமை (ஆகஸ்ட் 13) இரவு முதல் தடை விதிக்கப்பட்டது.
பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பொது இடங்களை கண்காணித்தல் உள்ளிட்ட பாதுகாப்புப் பணிகளுக்காக டெல்லி மாநகரம் முழுவதும் 10 ஆயிரம் காவல்துறையினர் குவிக்கப்பட்டு வருகின்றனர். போக்குவரத்துப் பணிகளுக்காக மட்டும் 3 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
செங்கோட்டையில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி தொடர்ச்சியாக 12வது முறையாக கொடியேற்ற இருக்கிறார்.
அதன்மூலம் இந்திராகாந்தி மற்றும் நேருவின் சாதனையை நெருங்க இருக்கிறார். அவர்கள் முறையே 16 மற்றும் 17 ஆண்டுகளாக தொடர்ந்து கொடியேற்றி இருந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
டெல்லி செங்கோட்டையில் நாளை காலை 7.30 மணிக்கு சுதந்திரத் தின விழா தொடங்கும். பிரதமர் மோடி காலையில் அங்கு வரும்போது தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங், இணை அமைச்சர் சஞ்சய் சேட் மற்றும் தற்காப்புத்துறை செயலாளர் அவரை வரவேற்பார்கள்.
தொடர்ந்து காவல் பணியாளர்கள் குழுமியுள்ள பகுதிக்கு பிரதமர் அழைத்துச் செல்லப்படுவார். அங்கு காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு தேசியக்கொடியை அவர் ஏற்றி வைப்பார்.
அப்போது வழக்கமான சம்பிரதாயப்படி 21 துப்பாக்கி குண்டுகள் முழங்கும். அதனைத்தொடர்ந்து அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.

