மணிப்பூர்: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, (செப்டம்பர் 13) மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் ரூ. 7,300 கோடிக்கும் அதிக மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்கள் பலவற்றுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.
எல்லா மாநிலங்களையும் உள்ளடக்கிய, நிலையான வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு, ரூ. 3,600 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள மணிப்பூர் நகர்ப்புறச் சாலைகள், வடிகால் மற்றும் சொத்து மேலாண்மை மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றுக்குப் பிரதமர் மோடி சனிக்கிழமையில் அடிக்கல் நாட்டினார்.
மேலும், ரூ. 2,500 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள ஐந்து தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள், மணிப்பூர் ‘இன்ஃபோடெக் டெவலப்மென்ட்’ திட்டம் மாநிலம் முழுவதும் ஒன்பது இடங்களில் பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகள் ஆகியவற்றையும் திரு மோடி தொடங்கி வைத்தார்.
இதற்கு முன்னதாக, பைராபி மற்றும் சாய்ராங் இடையே மிசோராமின் முதல் ரயில் பாதை தொடங்கி வைக்கப்பட்டது.
மணிப்பூரின் நீண்டகாலச் சவால்கள், குறிப்பாக மே 2023ல் தொடங்கிய இன வன்முறையை சமாளிக்க மோடி அரசு, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அறிவித்து வருகிறது.
மிகவும் தாமதமான பயணம்: பிரியங்கா காந்தி குறைகூறல்
இதற்கிடையே, திரு மோடி மணிப்பூருக்கு முன்னமே சென்றிருக்க வேண்டும் என்று இந்தியாவின் முதன்மை எதிர்க்கட்சியாகக் காங்கிரசின் தலைவர் பிரியங்கா காந்தி குறைகூறியுள்ளார்.
மணிப்பூரில் வன்முறை தொடர “அனுமதியளித்ததற்கு” திரு மோடியே பொறுப்பு என்றும் அவர் கூறினார்.
“இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு செல்வதற்குரிய இடமாக மணிப்பூர் உள்ளது என்று மோடி முடிவு செய்தது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. இவ்வளவு பேர் துன்பப்படுவதை அவர் அனுமதித்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது,” என்று பிரியங்கா காந்தி கேரளாவின் வயநாட்டில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.