ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் சித்தோர்கர் மாவட்டத்தில் புகழ்பெற்ற கிருஷ்ணருக்கான சவாரியா சேத் கோவில் உள்ளது.
இந்தக் கோவிலுக்குப் பக்தர் ஒருவர் வெள்ளித் துப்பாக்கி மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட பூண்டுகளைக் காணிக்கையாகக் கொடுத்துள்ளார்.
இந்த இரண்டும் சேர்ந்து கிட்டத்தட்ட அரை கிலோ எடை கொண்டவை.
கடவுளுக்கு ஆயுதம் காணிக்கையாக வழங்கப்படுவது இதுவே முதல் முறை என்று கோவில் தலைவர் ஜானகி தாஸ் கூறினார்.
கடந்த ஆண்டு ராஜஸ்தானில் பூண்டின் விலை கடுமையாக அதிகரித்தது. பூண்டு விளைச்சலால் விவசாயிகள் சிலர் அதிக லாபம் ஈட்டினர். அதனால், பக்தர் வெள்ளித் துப்பாக்கி, பூண்டு ஆகியவற்றை இறைவனுக்கு வழங்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இந்தக் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் வெவ்வேறு பரிசுகளை வழங்குவது இது முதல் முறை அல்ல.
கடந்த காலங்களில் வெள்ளி பெட்ரோல் பம்ப், விமானம், டிராக்டர், மடிக்கணினி, ஐபோன் போன்றவை பரிசுகளாக அந்தக் கோவிலுக்கு வந்துள்ளன. இங்குள்ள கிருஷ்ணர் செல்வத்தின் அதிபதியாக கருதி வணங்கப்படுகிறார் எனக் கூறப்படுகிறது.