பெங்களூரு: தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த பக்தர் ஒருவரது சமூக ஊடகப் பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தனது வேண்டுதல் காரணமாக, கடவுள் தங்கத்தின் விலையைக் குறைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள சிம்னாலி துர்க்கம்மா தேவி தேர்த் திருவிழா அண்மையில் நடைபெற்றது.
அப்போது பக்தர் ஒருவர், தங்கத்தின் விலை குறைய வேண்டும் என மனமுருக வேண்டிக் கொண்டார்.
அங்குள்ள வழக்கப்படி, ஒரு வாழைப்பழத்தில் எழுதி வேண்டிக்கொண்டால், வேண்டுதல் நிறைவேறும் என நம்பப்படுகிறது.
அதன்படி, அந்த பக்தரும், ‘ஏழைகளும் வாங்கும் அளவிற்கு தங்கம் விலை குறைய வேண்டும்’ என ஒரு வாழைப்பழத்தில் எழுதி கடவுளை வேண்டிக் கொண்டார்.
இது தொடர்பான புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக தங்கத்தின் விலை படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதையடுத்து, ஏராளமானோர் பொதுநலன் கருதி கடவுளிடம் வேண்டிக்கொண்ட அந்த பக்தரை வாழ்த்தி வருகின்றனர்.

