அலுவலகத்தில் மாண்டுகிடந்த டிஜிபி; உயிரை மாய்த்துக்கொண்டதாகச் சந்தேகம்

அலுவலகத்தில் மாண்டுகிடந்த டிஜிபி; உயிரை மாய்த்துக்கொண்டதாகச் சந்தேகம்

1 mins read
43ea5951-ee8f-446f-959d-16654019e36c
திரிபுரா காவல்துறை டிஜிபி அனுராக் தங்கார் உயிரை மாய்த்துக்கொண்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது. - கோப்புப் படம்: நார்த்தீஸ்ட் டுடே

அகர்தலா: திரிபுரா மாநில டிஜிபி அனுராக் தங்கார் தலைநகர் அகர்தலாவின் காவல்துறை தலைமையகத்தில் மாண்டுகிடந்தார்.

1994ஆம் ஆண்டு ஐபிஎஸ் காவல்துறைப் பயிற்சியை முடித்த அவர் தனது உயிரை மாய்த்துக்கொண்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது. பணியில் பயன்படுத்தப்பட்ட தனது துப்பாக்கியைக் கொண்டு அவர் உயிரை மாய்த்துக்கொண்டிருக்கக்கூடும் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அனுராக் தங்கார் உடனடியாக அகர்தலாவில் உள்ள கோவிந்த் பந்த் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினர்.

இச்சம்பவத்துக்குப் பின்னால் உள்ள நிகழ்வுகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதிகாரபூர்வ விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

அனுராக் தங்கார், சென்ற ஆண்டு மே மாதம் திரிபுரா டிஜிபியாகப் பொறுப்பேற்றுக்கொண்டார். அமிதாப் ரஞ்சனிடமிருந்து அவர் அப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

திரிபுரா காவல்துறைத் தலைவராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு அனுராக் தங்கார் அந்த மாநிலத்தின் உளவுத்துறை தலைமை இயக்குநராகப் பொறுப்பு வகித்தார்.

அவர் மத்தியப் புலனாய்வுப் பிரிவில் சிறந்து விளங்கவும் செய்தார். அந்தக் காலகட்டத்தில் அவர் மிக முக்கியமான விசாரணைகளை மேற்கொண்டார்.

தனது நிபுணத்துவ அணுகுமுறைக்கும் காவல்துறையில் பலதரப்பட்ட அனுபவங்களைப் பெற்றதற்காகவும் பிரபலமடைந்த தங்கார், திரிபுராவின் ஆக மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளில் ஒருவராகத் திகழ்ந்தார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

அவரின் திடீர் மறைவு காவல்துறையினர், அரசாங்க அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்