புதுடெல்லி: ஒலியைவிட ஆறு மடங்கு வேகத்தில் சீறிப்பாயும் ‘த்வனி’ என்ற ‘ஹைப்பர்சோனிக்’ ஏவுகணையை முழுக்க முழுக்க உள்நாட்டுத் தொழில்நுட்பத்தின் உதவியோடு உருவாக்கி உள்ளது இந்தியா. இது மணிக்கு 7,400 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப் பாயும் திறன் கொண்டதாகும்.
வரும் டிசம்பர் மாதம் இந்த ஏவுகணை சோதனை செய்யப்படும் என்றும் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) இதைத் தயாரித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் ‘பிரம்மோஸ்’ ஏவுகணைக்கு உலக அளவில் பெரும் வரவேற்பு உள்ளது. இந்நிலையில், ‘த்வனி’ ஏவுகணை மூலம் இந்தியா தற்காப்புத் துறையில் புதிய பாய்ச்சல் காட்டியுள்ளது.
ரஷ்யா, அமெரிக்கா, சீனாவிடம் மட்டுமே ‘ஹைப்பர்சோனிக்’ ஏவுகணைகள் உள்ளன. இந்த வரிசையில் இந்தியாவும் இணைய நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஏறக்குறைய 9 மீட்டர் நீளம், 2.5 மீட்டர் அகலம் கொண்ட ‘த்வனி’ ஏவுகணை, 6,000 கிலோ மீட்டர் முதல் 10,000 கிலோ மீட்டர் தூரம் உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்க முடியும்.
மேலும், மற்ற நாடுகளின் ஏவுகணைகளுக்கு இணையாக ‘த்வனி’ உருவாக்கப்பட்டுள்ளது.
“த்வனி ஏவுகணை முதலில் வானத்தை நோக்கி சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவைத் தாண்டிச் செல்லும். வளிமண்டலத்தைக் கடந்த பின்னர் விண்வெளியில் இருந்து பூமியை நோக்கிச் சீறிப் பாய்ந்து நிர்ணயிக்கப்பட்ட இலக்கை மிகத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும். இந்த வகை ஏவுகணைகளை ரேடாரில் கண்டறிவது கடினம்,” என்று டிஆர்டிஓ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் ‘தாட்’, இஸ்ரேலின் ‘அயர்ன் டோம்’ ஆகிய வான் பாதுகாப்புக் கவசங்களால்கூட ‘த்வனி’ ஏவுகணையை இடைமறித்து அழிக்க முடியாது என்றும் கூறியுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
டிசம்பர் மாதம் நடத்தப்படும் சோதனை வெற்றிபெறும் பட்சத்தில், எதிர்வரும் 2029ஆம் ஆண்டு ‘த்வனி’ ஏவுகணை இந்திய ராணுவத்தில் இணைக்கப்படும்.