புதுடெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தமிழகத் தலைவர் கு. அண்ணாமலை, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தன்னிச்சையாகப் பின்வாங்கியதாகத் தெரிவித்துள்ளார்.
“கட்சிக் குழுவிடம் எந்தத் தொகுதியிலும் போட்டியிடப்போவதில்லை என்பதை ஏற்கெனவே தெரிவித்துவிட்டேன். எனவே போட்டியிலிருந்து நான் விலக்கப்படவில்லை. மாறாகப் போட்டியிலிருந்து நானே விலகிக்கொண்டேன்,” என்று அண்ணாமலை விளக்கம் அளித்தார்.
தமது முடிவை ஏற்றுக்கொண்டதற்காகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்க தம்மை அனுமதித்ததற்காகவும் அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சிக்கு நன்றி கூறினார்.
கேரளத்தின் கன்னூரில் பிரசாரம் செய்துகொண்டிருந்த அண்ணாமலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க சென்னைத் திரும்பும்படி பணிக்கப்பட்டார்.
பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஒன்றிய அமைச்சர் பியுஷ் கோயல், ஒரே ஒரு தனித் தொகுதியில் மட்டும் போட்டியிடாமல் ஒட்டுமொத்த மாநிலத்திலும் நடைபெறும் பிரசாரத்தில் கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளதாகக் கூறினார்.
வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்யவிருப்பதாக அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி 210 இடங்களில் வெற்றிபெறவேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு பிரசாரம் செய்யவிருப்பதாக அண்ணாமலை சுட்டினார்.
சாத்துரிலிருந்து நயினார் நாகேந்திரன், மயிலாப்பூரிலிருந்து தமிழிசை சௌந்தரராஜன், கோயம்புத்தூரிலிருந்து வானதி சீனிவாசன், அவினாசியிலிருந்து ஒன்றிய அமைச்சர் எல் முருகன் ஆகியோரைப் பாரதிய ஜனதா கட்சி களமிறக்குகிறது.
தொடர்புடைய செய்திகள்
அண்ணாமலை போட்டியிடாதது குறித்து கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரையிலும் மதுராந்தகத்திலும் மோடி பிரசாரம் செய்தபோது பெருந்திரளான கூட்டத்தை அண்ணாமலை ஈர்த்ததாகக் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் குறிப்பிட்டார்.
இளம் வாக்காளர்களின் ஆதரவும் அண்ணாமலைக்கு இருந்தது என்றார் அவர்.
எனினும் கட்சி ஒருவரை மட்டும் மையமாகக் கொண்டதல்ல என்ற சிலர் அண்ணாமலையின் முடிவை ஆதரித்தனர்.

