புதுடெல்லி: மகாராஷ்டிரா, ஹரியானா தோ்தல்களில் வாக்காளா் பட்டியலில் முறைகேடு நடைபெற்றாக குற்றச்சாட்டு எழுந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தினாா்.
நாடாளுமன்றத்தில் வரவு செலவுக் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு திங்கட்கிழமை நடந்தது.
அப்போது கேள்வி நேரத்தின்போது வாக்காளா் பட்டியல் விவகாரம் குறித்து ராகுல் காந்தி கோரிக்கை விடுத்தார்.
“வாக்காளா் பட்டியல் விவகாரம் குறித்து ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் விவாதத்தைக் கோருகின்றன. வாக்காளா் பட்டியலை அரசு தயாரிப்பது இல்லை என்ற வாதத்தை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் நிச்சயம் விவாதம் நடத்த வேண்டும்,” என்று ராகுல் கூறினார்.
“நாடு முழுவதும் வாக்காளா் பட்டியலின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுந்துள்ளது. மகாராஷ்டிரா உட்பட அனைத்து மாநிலங்களிலும் வாக்காளா் பட்டியல் குறித்து எதிர்க்கட்சிகள் ஒரே குரலில் கேள்வி எழுப்பியுள்ளன,” என்று அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. சௌகதா ராயும் வாக்காளா் பட்டியலில் மோசமான குறைபாடுகள் உள்ளதாகக் குற்றஞ்சாட்டினார்.
மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத், வா்தமான் தொகுதிகளிலும், ஹரியானாவிலும் ஒரே வாக்காளா் அடையாள அட்டை எண்களைக் கொண்ட வாக்காளர்கள் இருப்பதை மம்தா பானா்ஜி சுட்டிக்காட்டியுள்ளதாகத் திரு சௌகதா ராய் கூறினார்.
“மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தோ்தல்களுக்கு முன்பு வாக்காளா் பட்டியல்கள் முழுமையாகத் திருத்தப்பட வேண்டும். வாக்காளா் பட்டியலில் ஏன் தவறுகள் ஏற்பட்டன என்பதற்குத் தோ்தல் ஆணையம் நாட்டு மக்களுக்குப் பதிலளிக்க வேண்டும்,” என்று தெரிவித்தார்.