புவனேஸ்வர்: ஒடிசாவின் கந்தமால் மாவட்டம், பலிகுடாவில் ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டு முகமையில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வருபவர் வைகுண்ட நாத் பெஹ்ரா.
இவர் ஏராளமான சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளதாக வந்த புகாரையடுத்து மாநில லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் புவனேஸ்வர், பாலசோர், ஜாஜ்பூர் மற்றும் பலிகுடாவில் பெஹ்ராவுக்கு தொடர்புடைய 9 இடங்களில் நேற்று முன்தினம் ஒரேநேரத்தில் சோதனை மேற்கொண்டனர்.
அந்தச் சோதனையில் பொறியாளர் மற்றும் அவரது குடும்பத்தினர்கள், உறவினர்கள் ஆகியோரின் பெயர்களில் 5 அடுக்குமாடிக் கட்டடங்கள், 4 வீடுகள், 7 மனைகள் என மொத்தம் 13 நிலங்கள் கண்டறியப்பட்டன.
மேலும், குடும்பத்தினரின் வங்கிப் பெட்டகங்களில் இருந்து சுமார் ரூ.2 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது.
மொத்த சொத்துகளையும் மதிப்பிட்ட பிறகு சட்டரீதியிலான நடவடிக்கை தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 1999ஆம் ஆண்டு வைகுண்ட நாத் பெஹ்ரா இளநிலைப் பொறியாளராக ரூ.6,000 மாதச் சம்பளத்தில் அரசுப் பணியில் சேர்ந்தார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவர் உதவி செயற்பொறியாளராகப் பதவி உயர்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒடிசா அரசாங்கத்தில் பொறியாளருக்கான ஆரம்ப மொத்த சம்பளம், மாதத்திற்கு 48,000 முதல் 65,000 வரை இருக்கும். உதவிச் செயல் பொறியாளர்கள் மாதத்திற்கு சுமார் 50,000 முதல் 60,000+ வரை சம்பாதிக்கலாம், அதே சமயம் நடுத்தர மற்றும் மூத்த அரசுப் பொறியாளர்கள் ஆண்டுக்கு 500,000 முதல் 10 லட்சம் வரை சம்பளம் பெறுகிறார்கள்.
இந்நிலையில், அரசுப் பணியில் இருக்கும் பொறியாளர் ஒருவருக்கு கோடிக்கணக்கான சொத்துகளை வாங்க எங்கிருந்து பணம் வந்தது என்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

