புதுடெல்லி: வெளிநாட்டுக் கைப்பேசி எண்களிலிருந்து வரும் அழைப்புகளுக்குப் பதிலளிக்க வேண்டாம் என்று இந்தியத் தொலைத்தொடர்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.
தனது சார்பாக அழைப்புகளை மேற்கொள்ள யாருக்கும் அங்கீகாரம் வழங்கவில்லை என்பதை தெளிவுபடுத்திய தொலைத்தொடர்புத் துறை, மக்களை விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தியாவில் மோசடி அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, தொலைத்தொடர்புத் துறை அதிகாரிகள் எனக் கூறிக்கொண்டு, மோசடி செய்பவர்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.
அதாவது, தொலைத்தொடர்புத் துறை அதிகாரிகள் என்று கூறிக்கொள்ளும் மோசடிப் பேர்வழிகள், தங்களது கைப்பேசி எண் சட்டவிரோத செயல்களில் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறி, தங்களது கைப்பேசி எண் இணைப்பைத் துண்டிக்கப்போவதாக அச்சுறுத்துவதாக பலரிடமிருந்து புகார்கள் வந்துள்ளன.
இதனைத் தொடர்ந்தே, தொலைத்தொடர்புத் துறை இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், தெரியாத எண்களிலிருந்து வரும் வாட்ஸ்அப் அழைப்புகளுக்கும் வெளிநாட்டு எண்களிலிருந்து வரும் அழைப்புகளுக்கும் பதிலளிக்க வேண்டாம் என்றும் பொதுமக்களுக்குத் தொலைத்தொடர்புத் துறை அறிவுறுத்தி இருக்கிறது.
நாட்டில் மோசடி அழைப்புகளின் அச்சுறுத்தலைத் தடுக்க அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இம்மாதம் 4ஆம் தேதி ‘சக்சு’ என்ற இணையதளத்தையும் அறிமுகப்படுத்தியது.
கடந்த 30 நாள்களுக்குள் பெறப்பட்ட மோசடி அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் வாட்ஸ்அப் செய்திகள் குறித்து மக்கள் இந்தத் தளத்தில் புகார் செய்யலாம்.
தகவல் தொடர்புத் துறையானது டிஜிட்டல் நுண்ணறிவுத் தளத்தை (டிஐபி) அறிமுகப்படுத்தியிருக்கிறது. இது சந்தேகத்திற்குரிய மோசடி இணைப்புகள் பற்றிய தரவைப் பகிர வழிவகுத்துள்ளது.
இந்த தளங்களைத் தொடங்கிவைத்துப் பேசுகையில், www.sancharsaathi.gov.in என்ற இணையத்தளம் தொடங்கப்பட்டதன்மூலம் கிட்டத்தட்ட ரூ.1,008 கோடி மதிப்பிலான மோசடிகள் தடுக்கப்பட்டதாக இந்தியத் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டார்