புதுடெல்லி: இந்தியாவில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு கடப்பிதழுக்கும் அதன் சேவைகளுக்குமான கட்டணங்களை மத்திய அரசு கணிசமாக உயர்த்தியுள்ளது.
புதிய கட்டண விகிதங்கள் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2012ஆம் ஆண்டிற்குப் பின் தற்போதுதான் கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
புதிய கட்டண விபரம்
36 பக்க சாதாரணக் கடப்பிதழ்: 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான கட்டணம் ரூ.1,500லிருந்து ரூ.2,500 ஆக உயர்ந்துள்ளது. தட்கல் கட்டணம் ரூ.3,500லிருந்து ரூ.5,000 ஆக அதிகரித்துள்ளது.
60 பக்கக் கடப்பிதழ்: சாதாரணக் கட்டணம் ரூ.3,500 ஆகவும் தட்கல் கட்டணம் ரூ.6,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
சிறுவர்களுக்கான கடப்பிதழ்: 36 பக்கக் கடப்பிதழ் சாதாரண முறையில் ரூ.1,750 ஆகவும் தட்கல் முறையில் ரூ.4,250 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தொலைந்துபோன அல்லது சேதமடைந்த 36 பக்க மாற்றுக் கடப்பிதழுக்கு சாதாரண முறையில் ரூ.5,000, தட்கல் முறையில் ரூ.7,500 கட்டணமாக வசூலிக்கப்படும்.
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான கட்டணங்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
ஜூலை 1 முதல் சமர்ப்பிக்கப்படும் அனைத்து விண்ணப்பங்களுக்கும் இந்தப் புதிய கட்டண முறையே பொருந்தும் என வெளியுறவுத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

