மும்பை: மும்பையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் ஆட்டோ ஓட்டாமலேயே மாதம் ரூ.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை சம்பாதிப்பதாக அதிகாரி ஒருவர் சமூக வலைத்தளத்தில் செய்த பதிவு பேசுபொருளாகி உள்ளது.
பிரபல நிறுவனமான லென்ஸ்கார்ட் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ராகுல்ரூபானி தனது இணையப் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
“இந்த வாரம் விசா விண்ணப்பிக்க அமெரிக்க தூதரகம் சென்றேன். அங்கு பாதுகாப்பு அதிகாரிகள் எனது பையை உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை.
“அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தபோது அங்கிருந்த ஆட்டோ டிரைவர் ஒருவர், பையை என்னிடம் தாருங்கள். நான் பத்திரமாக வைத்திருக்கிறேன். அதற்கு ரூ.1,000 கட்டணம் என்றார்.
“முதலில் நான் தயங்கினேன். ஆனாலும் வேறு வழியின்றி அவரிடம் கொடுத்துவிட்டு சென்றேன். பிறகுதான் தெரிந்தது. இது அற்புதமான வணிகம் என்று. அந்த டிரைவர் தினமும் 20 முதல் 30 பேரின் உடமைகளை தனது ஆட்டோவில் பாதுகாக்கிறார்.
“இதன்மூலம் அவருக்கு மாதம் ரூ.5 லட்சம் முதல் 8 லட்சம் வரை வருமானம் கிடைக்கும் என்று கருதுகிறேன்.
“ஆட்டோ ஓட்டாமலேயே அவர் நன்றாக சம்பாதிக்கிறார் என பதிவிட்டுள்ளார். மேலும் அதிகப்படியான பைகள் வந்தால் அதனை பாதுகாப்பாக வைத்திருக்க காவல் அதிகாரி ஒருவருடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.
“அந்த அதிகாரிக்கு சிறிய லாக்கர் வசதி இருக்கிறது. அதனால் பைகளை பாதுகாப்பாக வைத்து கொடுக்கிறார்,” என கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
பட்டப்படிப்பு படிக்காமலேயே மாதம் இவ்வளவு சம்பாதிக்கும் அவரது திறமையை பலரும் பாராட்டினர்.