சென்னை: ஊதிய பாக்கியைக் கேட்டவரை கொலை செய்த இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆயிரம் விளக்குப் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் ஞானகுமார் செங்கல், மணல், ஜல்லி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
அவருடன் சேர்ந்து மனோகர் வீட்டு மனை விற்பனைத் தொழில் செய்து வந்தார். இவர்களிடம் 60 வயது மணி என்பவர் வாகன ஓட்டுநராகப் பணியாற்றி வந்துள்ளார்.
ஊதிய பாக்கி இருந்ததால் அந்தத் தொகையைக் கேட்டு கடந்த 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சந்தோஷின் அலுவலகத்திற்குச் சென்று முறையிட்ட ஓட்டுநர் மணியை, சந்தோஷ் ஞானகுமாரும் மனோகரும் சேர்ந்து தங்கக் காப்பு, கார் சாவி ஆகியவற்றால் தாக்கியும் சுவரில் மோதியும் கொலை செய்தனர்.
இதையடுத்து, அவர்கள் இருவரையும் ஆயிரம் விளக்குக் காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, சென்னை 4வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஆர்.கே.பி.தமிழரசி மு்னிலையில் நடந்தது.
அப்போது, காவல் துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் டி.ரவிக்குமார் வாதிட்டார். இருவர் மீதான குற்றச்சாட்டும் சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, இருவருக்கும் ஆயுள் தண்டனையுடன் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

