மும்பை: கடந்த ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி டெல்லியிலிருந்து புக்கெட்டிற்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் திடீரென ஆட்டம் கண்டது. இதனால் 24 பயணிகள் காயமடைந்தனர்.
அதைத்தொடர்ந்து விமானத்தின் தலைமை விமானியிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதியானது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4) அந்த விமானியை ஏர் இந்தியா நிறுவனம் பணிநீக்கம் செய்தது.
விமான விபத்து விசாரணை அமைப்பின் முதற்கட்ட அறிக்கையில், அந்த விமானிமீது சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. அதைத்தொடர்ந்து விமானி பணிநீக்கம் செய்யப்பட்டார்.
“சோதனையில் தலைமை விமானி போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. போதைப்பொருள் பயன்பாடு உறுதி செய்யப்படுவது மிகவும் கவலைக்குரிய செய்தியாகும். அதனால் தகுந்த நடவடிக்கை எடுத்தோம்,” என்று சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அறிக்கையில் குறிப்பிட்டது.
சம்பவம் தொடர்பான இறுதி அறிக்கை வெளிவர ஓர் ஆண்டு அல்லது அதற்கு மேலும் ஆகலாம் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, விமானம் திடீரென ஆட்டம் கண்டபோது சில தொழில்நுட்பக் கோளாறும் நடந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறுகள் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


