மும்பை: இந்தியாவின் பொருளியல் தலைநகரான மும்பையில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின்போது ரூ. 1,745 கோடி மதிப்புள்ள ‘கொக்கெய்ன்’ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
மொத்தம் 349 கிலோ ‘கொக்கெய்ன்’ பறிமுதல் செய்யப்பட்டதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.
சிறிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்களைத் தொடர்ந்து கண்காணித்து வந்ததன் பலனாக, மிகப்பெரிய கடத்தல் கட்டமைப்பு கண்டறியப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தென் அமெரிக்கா, ஆப்பிரிக்க நாடுகள் மட்டுமன்றி, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், துருக்கி, ஃபிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து இந்தியாவுக்குப் போதைப்பொருள்கள் கடத்தப்படுகின்றன.
சரக்குக் கப்பல், சரக்கு விமானங்கள் மூலம்தான் அதிக அளவிலான போதைப்பொருள்கள் மும்பைக்குள் கடத்தப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மும்பை மாநகருக்குள் பேரளவில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருவதாக காவல்துறையின் அண்மைய ஆய்வில் தெரியவந்ததை அடுத்து, அங்கு மிகப்பெரிய சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, ‘கலம்போலி’ பகுதியில் ‘என்சிபி’ அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அங்கு வந்த ஒரு சரக்கு வாகனத்தை நிறுத்திச் சோதனையிட்டபோது, அதில் 136 மூட்டைகள் இருப்பது தெரியவந்தது.
தொடர்புடைய செய்திகள்
அவற்றைத் திறந்து பார்த்தபோது, கிலோ கணக்கிலான ‘கொக்கெய்ன்’ சிக்கியது.
‘தானே’ மாவட்டம் ‘பிவண்டி’ பகுதியில் உள்ள கிடங்கில் 213 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ‘கொக்கெய்ன்’ போதைப்பொருளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இயந்திரங்களுக்குள் போதைப்பொருளை மறைத்துவைத்து ஒரு கும்பல் இந்தியாவுக்குக் கடத்திச் சென்றது தெரியவந்துள்ளது.
அந்தக் கும்பலுடன் தொடர்பு உள்ளவர்களைத் தேடி வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்தியாவால் தேடப்படும் குண்டர் கும்பல் தலைவன் தாவூத் இப்ராகிம் தற்போது பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பதாக நம்பப்படுகிறது.
அவரது நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரான சலீம் டோலா அண்மையில் துருக்கியில் கைதாகி, பின்னர் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டார்.
அந்த நடவடிக்கையைத் தொடர்ந்து பேரளவில் ‘கொக்கெய்ன்’ கைப்பற்றப்பட்டுள்ளது.

