திருச்சி: தாய்லாந்திலிருந்து கடத்திவரப்பட்ட போதைப்பொருளைத் திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.6 கோடி எனக் கருதப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் சிவகங்கையைச் சேர்ந்த ஆடவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
முன்னதாக, மலேசியாவிலிருந்து ஏர்ஏஷியா விமானம் சனிக்கிழமை (ஜூன் 27) இரவு திருச்சி வந்தடைந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலையத்தில் பணியில் ஈடுபட்டிருந்த சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பயணி ஒருவரின் உடைமையில் ஆறு கிலோகிராம் ‘ஹைட்ரோபோனிக்’ எனும் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், அந்த ஆடவர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முகமது அலி, 36, என்பதும் தாய்லாந்திலிருந்து மலேசியா வழியாகத் திருச்சிக்கு விமானத்தில் வந்த அவர் போதைப்பொருளைத் தனது உடைமையில் மறைத்துக் கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடமிருந்த போதைப்பொருளைப் பறிமுதல் செய்தனர். மேலும், முகமது அலியை விமான நிலையக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
காவல்துறை அதிகாரிகள் அந்த ஆடவர்மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

