திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் ஈழவதிருத்தி கோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் தாமோதரன் என்ற மோகனன். 60 வயது முதியவரான இவர் 11 வயது சிறுவனை ஆள் இல்லாத நேரத்தில் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவர் அந்தச் சிறுவனை கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கிறார்.
இது தொடர்பான புகாரில் பொன்னானி காவல்துறையினர் தாமோதரனைக் கைது செய்தனர். அவர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. அந்த வழக்கு விசாரணை பொன்னானி விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 28) தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட முதியவர் தாமோதரனுக்கு அவர் மீதான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 107 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி சுபிதா சிரக்கல் தீர்ப்பு வழங்கினார்.
மேலும் அவருக்கு ரூ.4.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையைப் பாதிக்கப்பட்டவருக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, அதனைச் செலுத்தத் தவறினால் தாமேதரன் மேலும் 6.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.