திருவனந்தபுரம்: கேரள சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்க உள்ள இளம் வாக்காளர்களுக்கு இனிப்பான செய்தியை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். அவர்கள் வாக்களித்த பின்னர், அல்வா வழங்கப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு.
இதன்மூலம் இளம் வாக்காளர்களை உற்சாகப்படுத்துவதுடன், அடுத்தடுத்த தேர்தல்களில் அவர்களின் பங்கேற்பை உறுதிசெய்ய முடியும் என நம்புவதாக தலைமைத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
‘குடிமைச் சமூகத்திற்கு நீங்கள் ஆற்ற வேண்டிய இனிய சேவை’ என்ற நோக்கத்துடன், இளையர்கள் மத்தியில், தேர்தலில் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த இனிப்பு வழங்கும் நடவடிக்கை அமைந்துள்ளது.
கேரளாவில் ஏப்ரல் 9ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு ஆயிரக்கணக்கான இளம் வாக்காளர்கள் முதன்முறையாக வாக்களிக்க உள்ளனர்.
இதையடுத்து, அவர்களுக்கு வழங்குவதற்காக ஏராளமான அல்வா பாக்கெட்டுகள் மாநிலத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் முதல்முறை வாக்களிப்போர் அடங்கிய பட்டியலைத் தயாரிப்பதற்கான பணியில் மாவட்டத் தேர்தல் அதிகாரியும் வாக்குச்சாவடி நிலைய அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.
“இதற்காகக் கூடுதல் தன்னார்வலர்களையும் நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையத்தின் புதுமையான முயற்சியால் முதல்முறை வாக்காளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்,” என்று கேரள தலைமைத் தேர்தல் அதிகாரி ரத்தன் யு. கேல்கர் தெரிவித்துள்ளார்.

