சென்னை: தமிழகம் முழுவதும் எஸ்ஐஆர் எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
இதற்கு சில கட்சிகள் ஆதரவும் சில கட்சிகள் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன. தமிழகத்தை ஆளும் திமுக அரசாங்கம் இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை கடுமையாக எதிர்த்து வருகிறது.
இந்நிலையில், எஸ்ஐஆர் பணிக்கு எதிராக திமுக, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. திமுக சார்பில் அக்கட்சியின் அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதனை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையத்திற்கு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், திமுகவின் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளதாகத் தமிழக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.
தேர்தல் ஆணையம் தனது பதில் மனுவில், எஸ்ஐஆர் பணி தகுதி இல்லாத வாக்காளர்களை நீக்கவும் தகுதியுள்ள வாக்காளர்களை சேர்க்கவும் நடத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
“வாக்காளர் பட்டியலில் துாய்மையை நிலைநிறுத்த, சுதந்திரமாக, நேர்மையாகத் தேர்தலை நடத்த எஸ்ஐஆர் அவசியம். இதற்கு எதிராக திமுக தாக்கல் செய்த மனு விசாரணைக்கு தகுதியற்றது. எஸ்ஐஆர் குறித்து தவறான பிரசாரத்தை மேற்கொள்ள இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
“அதில் உள்ள தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை. இந்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும். இதுபோன்ற மனுக்கள், தேர்தல் ஆணையத்தின் அரசியல் கட்டமைப்பு குறித்து தவறான தகவல்களை பொதுமக்களிடம் பரப்புகின்றன,” என்றும் மனுவில் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இந்தியாவில் உள்ள 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

