பாட்னா: பல அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் வியூக ஆலோசகராக இருந்தவர் பிரசாந்த் கிஷோர். அவர் ஜன் சுராஜ் என்ற கட்சியைத் தொடங்கி பீகார் தேர்தலில் போட்டியிட்டார்.
ஆனால் அவரது கட்சி ஓர் இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
இந்நிலையில், தேர்தல் தோல்வி குறித்து பீகார் தர்பங்கா நகரில் திரு பிரசாந்த் கிஷோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
“நான் பாட்னாவில் உள்ள எனது இருப்பிடத்தை மாற்றி, பாட்னா ஐஐடி பல்கலைக்கழகம் அருகேயுள்ள ‘தி பீகார் நவ் நிர்மான் ஆசிரமத்துக்கு’ வந்துள்ளேன். பீகார் மாநிலம் அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கும் வரை நான் இங்கு தங்கியிருப்பேன்.
“அடுத்த தேர்தலில் ஜன் சுராஜ் கட்சி தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன். பீகார் வாக்காளர்கள் சாதி, சமயம், நிதி ஆதாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்காமல், சொந்த நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
“பீகார் மக்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை எண்ணி வாக்களிக்க வேண்டும். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பீகார் அரசியல் தலைவர்கள் நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவ் ஆகியோரது அலையில் சிக்கக் கூடாது.
“பெண்கள் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் ரூ.10,000 நிதிக்காக மக்கள் ஓட்டுகளை விற்கக் கூடாது,” என்று பிரசாந்த் கிஷோர் செய்தியாளர்களிடம் கூறினார்.

