திருவனந்தபுரம்: சட்டவிரோதமாக யானைத்தந்தங்களை வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மலையாள நடிகர் மோகன்லால், அவற்றைத் தம்கைவசம் வைத்திருப்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்கவும் சட்ட நடவடிக்கையிலிருந்து விலக்குக் கோரவும் கேரள வனத்துறையை அணுகியுள்ளார்.
கேரள உயர் நீதிமன்றத்தின் அண்மைய நடவடிக்கையைத் தொடர்ந்து, வனத்துறை வழங்கிய ஒருமுறை மட்டுமே சட்ட நடவடிக்கையிலிருந்து விலக்கு வழங்கப்படும் திட்டத்தைப் பயன்படுத்தி, தம் கைவசம் உள்ள வனவிலங்குப் பொருள்கள் குறித்து அவர் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
கொச்சியிலுள்ள மோகன்லாலின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அப்பொருள்கள் குறித்து வனத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் அண்மையில் விசாரணை நடத்தினார்.
1972ஆம் ஆண்டின் இந்திய வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின் 41வது பிரிவின்கீழ் நடத்தப்பட்ட அந்த விசாரணையின்போது, அப்பொருள்கள் எவ்வாறு அவரிடம் வந்தது, அதன் வயது என்ன, அதனை ஏன் முன்னரே அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறித்து நடிகரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டதாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


