தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மேகதாது அணை: பிரதமர் மோடியுடன் சித்தராமையா சந்திப்பு

1 mins read
f1c6adf4-a357-4d58-b315-60e095024eb2
பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார் கர்நாடக முதல்வர் சித்தராமையா. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்க வேண்டுமென பிரதமர் மோடியைக் கர்நாடக முதல்வர் சித்தராமையா நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான முயற்சிகளைக் கர்நாடக அரசு பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது.

காவிரியின் குறுக்கே இந்த அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்குக் கிடைக்கும் உபரிநீர்கூட கிடைக்காது என்று தமிழக அரசு இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

எனினும், மேகதாது அணைக்கு அனுமதி கோரி கர்நாடக அரசு தரப்பிலும் இத்திட்டத்துக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று தமிழக அரசு தரப்பிலும் மத்திய அரசிடம் முறையிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா வெள்ளிக்கிழமை (நவம்பர் 29) பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.

குறுகிய கால விவசாயக் கடன் வரம்பைச் சரிசெய்தல், பல்வேறு திட்டங்கள் மற்றும் நிலுவையில் உள்ள ரூ.10,000 கோடி நிதியை விடுவித்தல், மஹாதாயி ஆற்றின் கலசா பந்தூரி திட்டத்திற்கு அனுமதி ஆகிய கோரிக்கைகளையும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இத்துடன் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் சித்தராமையா கோரியுள்ளார்.

துணை முதல்வரும், நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார், எரிசக்தித் துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் பைரதி சுரேஷ் ஆகியோரும் சித்தராமையாவுடன் பிரதமர் மோடியைச் சந்தித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்