சென்னை: மத்திய கிழக்குப் பதற்றம் காரணமாக எரிவாயுக் கலன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள ஒரு கணினித் தொழில்நுட்ப நிறுவனம் தனது ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
எரிவாயுக் கலன் தட்டுப்பாடு, இந்தியாவின் பெருநிறுவன அலுவலகங்களில் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கி உள்ளது.
வணிக எரிவாயுக் கலன் போதுமான அளவு இல்லாததால் பெருநிறுவனங்களுக்குள் செயல்படும் உணவகங்கள் பல மூடப்பட்டு வருகின்றன.
அதனால், அந்நிறுவனங்களின் ஊழியர்கள் உணவுக்குத் திண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதனைக் கவனித்த ஹெச்சிஎல் டெக் (HCLTech) நிறுவனத்தின் சென்னை கிளை, தனது ஊழியர்களை வியாழன் (மார்ச; 12), வெள்ளி (மார்ச் 13) ஆகிய இரு நாள்களுக்கு வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு கேட்டுக்கொண்டதாக அந்தத் தகவல் குறித்து அறிந்த இரண்டு மூத்த நிர்வாகிகளை மேற்கோள் காட்டி ‘மின்ட்’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் மீண்டும் திங்கட்கிழமை வேலைக்குத் திரும்புவதற்குள் எரிவாயுக் கலன் தட்டுப்பாடு நீங்கலாம் என அந்நிறுவனம் கருதுவதாக அச்செய்தி கூறுகிறது.

