பெங்களூரு: ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களும் நிதியும் சேர்க்கப்பட்டது தொடர்பான வழக்கில் இந்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் பெங்களூரு நகரத்தில் எட்டு இடங்களில் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்கள் நடக்காத வண்ணம் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் பயங்கரவாதிகள், அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் என பலரும் கைது நடவடிக்கைக்கு ஆளாகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு தேசியப் புலனாய்வு முகமை பெங்களூரு, மும்பையில் நடத்திய சோதனையின் போது ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்ப்பு நடவடிக்கையில் பலர் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து 15 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், இரண்டு அறக்கட்டளைகள் மூலம் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு தனி நபரிடம் இருந்து நிதி வசூல் செய்யப்பட்டதும் தெரிய வந்தது.
இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை மேற்கொண்ட தீவிர விசாரணையின்போது பல்வேறு முக்கியத் தகவல்கள் தெரிய வந்தன. அவற்றின் அடிப்படையில் அமலாக்கத் துறையினரும் இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், அறக்கட்டளைகள் மூலம் அந்நியச் செலாவணி மோசடி, நிதி மோசடி நடந்திருப்பது தெரிய வந்தது.
அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள், பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) மேற் குறிப்பிட்ட அறக்கட்டளைகளின் அலுவலகங்கள், அவற்றின் நிர்வாகிகளுக்குச் சொந்தமான வீடுகள் உள்ளிட்ட எட்டு இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
அதில் அறக்கட்டளைகள் மூலம் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதை உறுதி செய்யும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
மேலும் இந்த அறக்கட்டளைகள் செல்வந்தர்களிடம் நிதி திரட்டி, இளையர்களை துருக்கி வழியாக சிரியாவுக்குச் செல்ல உதவியது தொடர்பான ஆவணங்களும் சிக்கியுள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

