வாஷிங்டன்: நாட்டின் குடியுரிமைக் கொள்கைகளை அமெரிக்கா கடுமையாக்கி வரும் சூழலில், அங்குள்ள கல்லூரிகளில் உயர் கல்வியில் சேரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 2025-26ஆம் கல்வியாண்டில் 15 விழுக்காடு சரிந்துள்ளது.
மாணவர்கள், பார்வையாளர்களுக்கான நுழைவு இசைவு (விசா) நடைமுறைகளைக் கடந்த ஜூலை மாதத்தில் அமெரிக்க அரசு கடுமையாக்கியது.
புதிய விதிமுறைகளின்படி, நுழைவு இசைவில் வருபவர்கள் அதிகபட்சமாக நான்கு ஆண்டுகள் மட்டுமே அமெரிக்காவில் தங்கியிருக்க முடியும்.
அத்துடன், பட்டப்படிப்பை முடித்த பிறகு விருப்பச் செயல்முறைப் பயிற்சி (ஓபிடி) திட்டத்தின்கீழ் பணிபுரிய விரும்பும் வெளிநாட்டு மாணவர்களிடம் 100,000 டாலர் (ரூ.95.70 லட்சம்) வசூலிப்பது குறித்தும் அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.
இத்தகைய புதிய நடைமுறைகளின் எதிரொலியாக அமெரிக்காவில் உயர் கல்வி படிப்பதற்காகச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த ‘காமன் ஆப்’ நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில், 2026-27ஆம் கல்வியாண்டில் அனைத்துலக மாணவர்களின் விண்ணப்பங்கள் 10 விழுக்காடு அளவுக்குச் சரிந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, அமெரிக்க உயர் கல்வியில் சேரும் வெளிநாட்டினரில் இந்தியர்களே அதிகம் என்ற நிலையில், இவ்வாண்டில் விண்ணப்பித்த இந்திய மாணவர் எண்ணிக்கை 15 விழுக்காடு வரை சரிந்துள்ளது.
அனைத்துலகக் கல்வியாளர்களும் ஆராய்ச்சி நிறுவனங்களான ‘என்ஏஎஃப்எஸ்ஏ’, ‘ஜே.பி. இன்டர்நேஷனல்’ ஆகியவையும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், 2025-26ஆம் ஆண்டில் அனைத்துலக மாணவர்கள் சேர்க்கைப் பதிவு 11.69 லட்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது 10.57 லட்சமாகக் குறைந்ததாகக் தெரிவிக்கப்பட்டது.
இதுபோல் அனைத்துலக மாணவர் சேர்க்கை குறைவதனால், அமெரிக்காவின் உள்ளூர் பொருளியல் வளர்ச்சியில் அவர்களின் பங்களிப்பு 2025-26ல் ரூ.4 லட்சம் கோடியாக இருந்தது, 2026-27ல் ரூ. 3.7 லட்சம் கோடியாகக் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


