புதுடெல்லி: மத்தியப் பிரதேசத்தில் பாஜகவும் அம்மாநில அரசு எந்திரமும் இணைந்து பொதுமக்களுக்குச் சொந்தமான அரிசியைக் கொள்ளையடிப்பதாக காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றஞ்சாட்டியுள்ளார்.
எத்தனால் என்ற பெயரில் ரூ.1,200 கோடிக்கு நடந்துள்ள ஊழல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக அவர் தமது எக்ஸ் தளப்பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் பெட்ரோலுடன் கலக்கும் பொருட்டு, எத்தனால் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த உற்பத்தியை அதிகரிக்க இந்திய அரசு பல்வேறு மானியத் திட்டங்களை அறிவித்துள்ளது.
எத்தனால் ஆலைகளுக்கு அரிசி அனுப்பப்படுவதும் மானியத் திட்டங்களில் ஒன்றாகும்.
இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாராவில் உள்ள ஓர் எத்தனால் ஆலைக்கு அனுப்பப்பட்ட அரிசி மூட்டைகள் அங்கு சென்றடையவில்லை என்று இந்திய உணவு கழகம் எழுப்பிய புகாரையடுத்து நான்கு பேர் கைதாகினர்.
மேலும், மானிய விலைக்கான தனியார் ஆலைகளுக்குத் திருப்பிவிடப்பட்டு மீண்டும் அரசு நிறுவனங்களுக்கே விற்கப்படுவதாக எதிர்க்கட்சிகளும் மத்தியப் பிரதேச அரசுக்கு எதிராக வரிந்துகட்டின. இதையடுத்து, அம்மாநில அரசு சிறப்பு புலனாய்வுக் குழு நடத்தி வருகிறது.
இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தை ஊழலின் மாதிரியாக பாஜக மாற்றிவிட்டது என்று குறிப்பிட்டுள்ள திரு கார்கே, வழக்கம்போல் பிரதமர் மோடி நடப்பதையெல்லாம் அமைதியாக வேடிக்கை பார்ப்பதாக விமர்சித்துள்ளார்.
ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், இளம் பெண்களின் ஊட்டச்சத்துக்காகப் பயன்படுத்தப்பட வேண்டிய அரிசி, ஊழலுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக திரு கார்கே சாடியுள்ளார்.
மத்தியப் பிரதேசம் தற்போது ஊழலின் மையமாக மாறியுள்ளது என்று குறிப்பிட்டுள்ள அவர், அரிசி ஆலை அதிபர்கள், எத்தனால் மாஃபியாக்கள், பாஜக அரசின் ஆதரவுடன் ஐந்து லட்சம் டன் அரிசி இந்த ஊழல் விளையாட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

