கொய்யாப்பழம் பறித்த சிறுமியை சங்கிலியில் கட்டி வைத்து அடித்த முன்னாள் ராணுவ வீரர்

கொய்யாப்பழம் பறித்த சிறுமியை சங்கிலியில் கட்டி வைத்து அடித்த முன்னாள் ராணுவ வீரர்

2 mins read
7091921b-c0e5-454b-b1d3-0b97ab856ba9
மரத்தில் இருந்து கொய்யாப்பழம் பறித்த சிறுமியை சங்கிலியால் கட்டி வைத்து மனிதாபிமானமற்ற முறையில் அடித்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர். - படம்: இந்தியா டுடே
Google News Preferred Icon

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தின் ஊனா மாவட்டத்தில், மரத்தில் இருந்து கொய்யாப்பழம் பறித்த சிறுமியை, ஓய்வுபெற்ற ராணுவ வீரர் சங்கிலியால் கட்டி வைத்து இரக்கமின்றி அடித்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி, அண்டை மாநிலத்திலிருந்து புலம்பெயர்ந்து வந்த ஊழியர் ஒருவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வீட்டின் அருகே இருந்த மரத்தில் கொய்யாப்பழம் பறித்ததே அந்தச் சிறுமி செய்த குற்றம் எனக் கூறப்படுகிறது.

இதற்காக ஆத்திரமடைந்த அந்த முன்னாள் ராணுவ வீரர், சிறுமியைத் தனது வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று, சிறுமியின் கால்களை இரும்புச் சங்கிலியால் படிக்கட்டோடு பிணைத்து அடித்துள்ளார்.

அப்போது அங்கு வந்த ரோகித் என்ற இளைஞர், இச்சம்பவத்தைத் தனது கைப்பேசியில் படம்பிடித்தார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வரும் அந்தக் காணொளியில், ‘என்னைத் தப்பிக்க விடுங்கள்’ என்று அந்தச் சிறுமி அழுதுகொண்டே கெஞ்சுகிறார்.

ஆனால், ராணுவ வீரர் ‘இவள் பழங்களைத் திருடிவிட்டாள்’ என்று துளியும் இரக்கமின்றி தனது செயலை நியாயப்படுத்திப் பேசுகிறார்.

காணொளி எடுத்த இளைஞர், ஒரு சிறுமியிடம் இப்படியா நடந்துகொள்வது என்று ராணுவ வீரரைத் தட்டிக் கேட்பதும் அதில் பதிவாகியுள்ளது.

சாட்சியான ரோகித் அளித்த தகவலின் பேரில், குழந்தைகள் உதவி மையமும் காவல்துறையும் விரைந்து செயல்பட்டன.

காவல்துறையினரின் விசாரணையில், அந்த முன்னாள் ராணுவ வீரர் தனது தவற்றை ஒப்புக்கொண்டு சிறுமியின் குடும்பத்திடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

இருப்பினும், காவல்துறையினர் தாமாக முன்வந்து அவர்மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, அவரது குடும்பத்தினரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்
சிறுமிவாக்குமூலம்குழந்தைகள்குற்றம்