விஜயவாடா: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த ஒன்பது நாள்களிலேயே அதிலிருந்து விலகுவதாக அறிவித்து அதிர்ச்சி அளித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அம்பதி ராயுடு.
ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியவரான 38 வயது ராயுடு, அரசியலில் இருந்து சிறிதுகாலம் ஒதுங்கி இருக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ராயுடு, 2023ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளுடன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார்.
அதனைத் தொடர்ந்து, அவர் அரசியலில் இறங்கப் போவதாகச் செய்திகள் வெளியாயின.
அவற்றை உண்மையாக்கும் வகையில், கடந்த டிசம்பர் 28ஆம் தேதி ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முன்னிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் ராயுடு.
அதனைத் தொடர்ந்து, இவ்வாண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அல்லது ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் அவர் போட்டியிடக்கூடும் எனப் பேச்சு அடிபட்டது.
இத்தகைய சூழலில், கட்சியிலிருந்து விலகி, அரசியலிலிருந்து சிறிது காலம் தள்ளி இருக்கப்போவதாக ராயுடு தமது ‘எக்ஸ்’ ஊடகப் பக்கம் வழியாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.