புதுடெல்லி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வியாழக்கிழமை (மார்ச் 27) இந்திய அரசு அறிக்கை வெளியிட்டது.
மத்திய அரசின் புதிய அறிவிப்புப்படி ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.13 என இருந்த கலால் வரி ரூ.3 எனவும், ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.10 என இருந்த கலால் வரி பூஜ்ஜியமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து ஈரானுடன் போர் நடத்துவதால் உலக நாடுகளில் எரிபொருள் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுத் தட்டுப்பாடு நிலவுகிறது.
இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்து வருகிறது. இந்தச் சூழலில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை இந்திய அரசு குறைத்துள்ளது.
எண்ணெய் தொழில் மேம்பாட்டு வாரிய வரி, தற்செயல் தேசியப் பேரிடர் வரி, கலால் வரி, கூடுதல் கலால் வரி, சிறப்பு கூடுதல் கலால் வரி போன்ற வரிகளை பெட்ரோல், டீசல் மீது இந்திய அரசு விதித்திருந்தது. தற்போது கூடுதல் கலால் வரி நீக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்குப் போர்ச் சூழலால் அனைத்துலக அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்குக் கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் மீதான எரிபொருளுக்கான கலால் வரியை அரசு குறைத்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயர்வால் அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் செலவினத்தைக் குறைக்கும் வகையில் தற்போது கூடுதல் கலால் வரியை இந்திய அரசு குறைந்துள்ளதாகத் துறை சார்ந்த கவனிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
இதனால் பெட்ரோல், டீசல் விலை இந்தியச் சந்தையில் குறைய வாய்ப்பில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம் இந்தக் கூடுதல் கலால் வரி குறைப்பு நடவடிக்கை மூலம் சில்லறை சந்தையில் பெட்ரோல், டீசல் விலை உயராமல் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

