புதுடெல்லி: இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியை முற்றுகையிட்டு ஏறக்குறைய இரண்டு மாத காலமாக நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் நேற்று புதிய கட்டத்தை எட்டியது. விவசாயப் பிரமுகர்களும் மத்திய அரசாங்க அமைச்சர்களும் நேற்று ஒன்பதாவது சுற்று பேச்சுவார்த்தையைத் தொடங்கினர்.
நேற்றைய பேச்சுவார்த்தையின் போது இரு தரப்பினரும் தங்கள் நிலையில் உறுதியாக இருந்ததாகவும் இருந்தாலும் நேரடி பேச்சுவார்த்தை நடைமுறையைத் தொடர்வதற்குத் தாங்கள் தயார் என்று இரு தரப்பினரும் மீண்டும் உறுதி கூறியதாகவும் தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன.
அதேவேளையில், புதுடெல்லியில் போராட்டம் நடத்திய ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்கள், பாஜக அரசு நிறைவேற்றி இருக்கும் மூன்று வேளாண் மசோதாக்களும் விவசாயிகளை வாழவைப்பதற்காக அல்ல என்றும் அவர்களை நசுக்குவதற்காகவே மத்திய அரசு அந்த மசோதாக்களைச் சட்டமாக்கி இருக்கிறது என்றும் குரல் எழுப்பினர்.
காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் விவசாயிகளுக்கு ஆதரவாக நேற்று போராட்டத்தில் குதித்தனர்.
"மூன்று சட்டங்களையும் மத்திய அரசாங்கம் மீட்டுக்கொள்ள வேண்டி இருக்கும். அதுவரையில் போராட்டம் ஓயாது," என்று அவர்கள் சூளுரைத்தனர்.
விவசாயிகள் இரண்டு மாத காலமாகப் போராடி வருகிறார்கள். அந்தப் போராட்டத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வர அரசாங்கம் இதுவரையில் எட்டு சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தி இருக்கிறது. ஆனால் உருப்படியான முடிவுகள் ஏற்படவில்லை.
வேளாண் மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து இருக்கிறது. ஒரு குழுவையும் அமைத்து இருக்கிறது. ஆனால், அந்தக் குழுவை விவசாயிகள் நிராகரித்துவிட்டனர்.
அந்தக் குழுவில் ஒருவராக இடம்பெற்ற புபேந்தர் சிங் மான் என்பவர் விலகிவிட்டார்.
இந்திய குடியரசு தினமான ஜனவரி 26ஆம் தேதி புதுடெல்லிக்கு அணிவகுத்துச் சென்று போராட்டத்தை மேலும் கடுமையாக்கப் போவதாக விவசாயிகள் எச்சரித்து இருக்கிறார்கள்.
இதற்கிடையே, இந்தியா நிறைவேற்றி இருக்கும் வேளாண் மசோதாக்கள் குறிப்பிடத்தக்க ஒரு செயல் என்றும் ஆனால் விவசாயிகள் அவற்றால் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அனைத்துலக பண நிதியம் கருத்து தெரிவித்தது.
மூன்று சட்டங்களையும் ரத்து செய்யக் கோரி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

