மகாராஷ்டிரா: வாகனத்தை இயக்குவதற்கு குறிப்பிட்ட வயதும் அதிக பொறுப்புணர்வும் முக்கியம். இந்தியா உட்பட உலகம் முழுவதிலும் வாகனத்தை ஓட்டுவதற்குக் குறிப்பிட்ட ஒரு வயது வரம்பு உள்ளது.
இருப்பினும், சிறு குழந்தைகள் சைக்கிள்கள், கார்கள் ஓட்டுவது போன்ற செயல்கள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
அந்த வகையில், மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சத்ரபதி சாம்பாஜிநகர் மாவட்டத்தில் அத்தகைய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஒரு சிறுமி தன் தந்தையைப் பின்னால் உட்கார வைத்து மோட்டார்சைக்கிளில் செல்வதைக் காட்டும் காணொளி பரவிவருகிறது.
அந்தக் காணொளியைக் கண்டு பலரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். அதுபோன்ற செயல்கள் ஆபத்தானவை என்று பலர் கூறியுள்ளனர்.
அந்தக் காணொளி, பள்ளி உடை அணிந்திருந்த ஒரு சிறுமியும் அவளது தந்தையும் தலைக்கவசம் அணியாததைக் காட்டுகிறது. தந்தை அலட்சியமாக நடந்துகொள்கிறார் என்று பலர் குற்றஞ்சாட்டினர்.
“அன்புகூர்ந்து குழந்தையை இப்படிச் செய்யச் சொல்லாதீர்கள். பெற்றோர் பொறுப்புடன் இருக்கவேண்டும்,” என்று ஒருவர் கூறினார்.
“சட்டப்படி, இது சரியல்ல. இளம் குழந்தையின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிப்பது குற்றச்செயலாகும்,” என்றும் அவர் தெரிவித்தார்.

