புதுடெல்லி: சிஐஎஸ்எஃப் என்று அழைக்கப்படும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையில் முதல் முறையாக பெண் அதிரடிக் குழுவினரை முக்கிய பணிகளில் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அக்குழுவுக்குக் கடுமையான பயிற்சிகளை வழங்கி பிரச்சினைகள் அதிகமுள்ள விமான நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பெண் அதிரடிக் குழுவினரைப் பணியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக இந்து தமிழ் திசை தெரிவிக்கிறது.
இதற்காக 100 பெண் சிஐஎஸ்எஃப் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆயுதப் பயிற்சி, தீயணைப்புப் பயிற்சி, ஓட்டம், காடுகளில் உயிர் வாழும் பயிற்சி, நெருக்கடியான தருணங்களில் சாமர்த்தியமாக முடிவெடுப்பது, குழுப் பணியைச் சோதிக்க வடிவமைக்கப்பட்ட 48 மணி நேர நம்பிக்கையை வளர்க்கும் பயிற்சி போன்ற பயிற்சிகள் அளிக்கப்படும்.
மத்தியப் பிரதேசத்தின் பர்வாஹாவில் உள்ள வட்டாரப் பயிற்சி மையத்தில் (ஆர்டிசி) பெண் கமாண்டோக்களுக்கான இந்தப் பயிற்சிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளன.
பல விமான நிலையங்களில் தற்போது பணிமயர்த்தப்பட்டுள்ள 30 பெண்களைக் கொண்ட முதல் குழு ஆகஸ்ட் 11 முதல் அக்டோபர் 2025 வரை பயிற்சி பெறும்.
இதையடுத்து இரண்டாவது பெண் அதிரடிக் குழு இவ்வாண்டு அக்டோபர் 6 முதல் நவம்பர் 29 வரை பயிற்சியில் இருக்கும். குறைந்தது 100 பெண் கமாண்டோக்களுக்கு இதுபோன்று பயிற்சிகள் அளிக்கப்படவிருக்கிறது.
இது குறித்து பேசிய சிஐஎஸ்எஃப் செய்தித் தொடர்பாளர், “சிஐஎஸ்எஃப் முக்கியப் பணிகளில் பெண்களைச் சேர்ப்பது பாலினச் சமத்துவத்தை நோக்கிய முதல்படியாக அமையும். மேலும், சிஐஎஸ்எஃப் படையில் பெண்களின் பங்களிப்பை 10 விழுக்காட்டுக்கு உயர்த்த வேண்டும் என்ற அரசாங்கத்தின் இலக்கை வேகமாக அடைய இது உதவும்,’’ என்றார்.