கண்ணூர்: தனது திருமணத்தன்று, தாலிகட்டும் நேரம் நெருங்கிவிட்ட போதிலும், திருமண மண்டபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட இருவருக்கு சிகிச்சை அளித்த மணப்பெண்ணுக்குப் பாராட்டுகள் குவிகின்றன.
திருமண விருந்துக்குப் பொறுப்பேற்றிருந்த சமையல் குழுவைச் சேர்ந்த இருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட, மணக்கோலத்தில் சிகிச்சை அளித்தார் மருத்துவரும் மணமகளுமான ஷிரின் சுபைர்.
கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற்ற அந்தத் திருமண விழாவுக்கு உறவினர்களும் நண்பர்களும் என ஏராளமானோர் வந்திருந்தனர்.
திருமணச் சடங்குகள் நடந்துகொண்டிருந்தபோது, சமையல் குழுவைச் சேர்ந்த இரு பெண்கள் மயங்கி விழுந்ததாகத் தகவல் பரவியது.
ஒருவருக்கு மூக்கில் இருந்து ரத்தம் வடிந்ததாகவும் மற்றொரு பெண்ணுக்குக் கடும் தலைச்சுற்றல் ஏற்பட்டதாகவும் மணமகள் ஷிரினுக்கு விவரம் தெரியவர, அவர் சற்றும் யோசிக்காமல் திருமணச் சடங்குகளை உடனடியாக நிறுத்திவைத்தார்.
பட்டுப்புடவை, ஆபரணங்கள் என மணக்கோலத்தில் இருந்த நிலையிலேயே, இரு பெண்களுக்கும் முதலுதவி சிகிச்சை அளித்து சில நிமிடங்களில் அவர்களை இயல்பு நிலைக்குக் கொண்டுவந்தார்.
இதுதொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
‘முதலில் மருத்துவர்; அதன் பிறகுதான் மணப்பெண்’ என்ற வாசகத்தோடு இணையவாசிகள், ஷிரினைப் பாராட்டி பதிவிட்டுள்ளனர்.


