75 லட்சம் பீகார் பெண்களுக்கு ரூ.10,000 நிதியுதவி

2 mins read
be716bea-9159-4600-9ae8-52e1348a6978
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. - படம்: ஊடகம்

பாட்னா: பீகார் மாநிலத்தில் மகளிர் வேலை வாய்ப்புத் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்மூலம் ஏறக்குறைய 75 லட்சம் பீகார் பெண்களுக்குத் தலா 10,000 ரூபாய் நிதி​யுத​வி வழங்கப்பட உள்ளது.

பெண்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற ஒரே இலக்குடன் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த வருவாய் ஈட்டும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு நிதியுதவி வழங்கப்படுகிறது.

அவரவர் வங்கிக் கணக்குகளில் ரூ.10,000 வரவு வைக்கப்பட்டது. அந்தப் பணத்தைக் கொண்டு, தாங்கள் விரும்பும் சுயதொழிலைத் தொடங்கி தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.

தொழில் தொடங்குவதற்கு ஆசைப்படும் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். அவர்கள் தயாரிக்கும் பொருள்களை விற்பனை செய்வதற்கான வழிகாட்டி உதவிகளும் செய்து கொடுக்கப்படும்.

சுய தொழில் தொடங்க ஆர்வமில்லாத பெண்கள் அந்த 10,000 ரூபாயை தங்களது பிற வாழ்க்கைச் செலவுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனை அவர்கள் திருப்பிக் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளதால், பீகார் மாநிலப் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தங்களது சிறு தொழிலில் திறம்பட செயல்படும் பெண்கள் கண்காணிக்கப்பட்டு, அவர்களுக்கு அடுத்தகட்ட உதவியாக தொழிலை மேம்படுத்திக்கொள்ள ரூ.2 லட்சம் வரை மானிய உதவி வழங்​கப்​படும் என்று முதல்​வர் நிதிஷ் குமார் உறுதியளித்து உள்​ளார்.

75 லட்சம் பெண்களின் வாழ்வில் ஒளி ஏற்றும் இந்தத் திட்டத்துக்கு 7,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் பீகார் மாநில பெண்களிடம் மிகப்பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பீகாரில் முதல்​வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்​கிய ஜனதா தளம், பாஜக கூட்​டணி அரசு ஆட்சி நடத்தி வரு​கிறது. அம்மாநில அரசின் சார்​பில் முதல்​வரின் மகளிர் வேலை​வாய்ப்பு திட்​டம் அண்​மை​யில் அறிவிக்​கப்​பட்​டது.

அதனைத் தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசி​ய​போது, “பீகார் மக்​களின் முன்​னேற்​றத்​துக்​காக நானும் முதல்​வர் நிதிஷ் குமாரும் அயராது பாடு​பட்டு வரு​கிறோம்.

“தற்​போது தொடங்​கப்​பட்டு இருக்​கும் மகளிர் வேலை​வாய்ப்பு திட்​டத்​தின் மூலம் ஏராள​மான பெண்​கள் மளிகைக் கடைகள், பாத்​திரக் கடை, அழகு சாதனப் பொருட்​கள் கடைகள், பொம்மைக் கடைகள் உட்பட பல்​வேறு சிறிய வணிக நிறு​வனங்​களைத் தொடங்க உள்​ளனர். சிலர் கறவை மாடு​கள், மீன் வளர்ப்​பு, ஆடு வளர்ப்பு உள்​ளிட்ட தொழில்​களில் கால் பதிக்க உள்​ளனர்,” என்று பேசி​னார்.

குறிப்புச் சொற்கள்