புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வெள்ளிக்கிழமை (ஜூன் 12) அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.
தீச்சம்பவம் துக்ளகாபாத் மத்யம் மார்க்கில் உள்ள அடுக்குமாடிக் கட்டடத்தில் அதிகாலை 2:35 மணியளவில் ஏற்பட்டது.
தரைத்தளத்தில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் முதலில் தீ மூண்டது. அதில் வாகனங்கள் எரிந்தன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் கட்டடத்திற்குள் சிக்கிய ஆறு பேரைச் சன்னலை உடைத்து பாதுகாப்பாக மீட்டனர்.
படுகாயமடைந்திருந்த அவர்கள் உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அவசரச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதிகாலை 3:45 மணியளவில் நீண்ட போராட்டத்திற்குப் பின் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இருப்பினும் அந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
விபத்து ஏற்பட்ட இடம் மிகவும் குறுகலான பாதையில் இருந்ததால், சம்பவ இடத்திற்குத் தீயணைப்பு வாகனங்கள் விரைந்து செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. இதனால் மீட்புப் பணிகள் தாமதம் ஆகின. சில நாள்களுக்கு முன்னர் டெல்லியின் மால்வியா நகரில் உள்ள விடுதியில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் 21 பேர் மாண்டனர்.

