திருவனந்தபுரம்: நாட்டிலேயே முதல்முறையாக, ரயில்வே திட்டப் பணிக்காக வழிபாட்டுத்தலம் ஒன்று 26 மீட்டர் தூரம் நகர்த்தப்பட்டது.
கேரள மாநிலம் தேவாரா பகுதியில் அமைந்துள்ளது செயின்ட் ஜான்ஸ் நெபுமியன் தேவாலயம். இது 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
அந்தப் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளப் பாதையை விரிவாக்கம் செய்ய அதிகாரிகள் திட்டமிட்டனர். ஆனால், பழமையான தேவாலயம் ரயில்வே புதிய பாதையில் அமைந்திருப்பதால் அதை என்ன செய்வது என்ற சிக்கலும் கேள்வியும் எழுந்தன.
இதையடுத்து, பொறியாளர்கள் அந்த வழிபாட்டுத்தலத்தை பூமியில் இருந்து அஸ்திவாரத்தோடு பெயர்த்தெடுத்து, மெல்ல நகர்த்தி வைத்துள்ளனர்.
இதன்மூலம் பால்லாண்டு கால வழிபாட்டுத்தலத்தின் மீதான நம்பிக்கை மேலும் வலுவடைந்துள்ளதாகப் பல்வேறு தரப்பினரும் பாராட்டியுள்ளனர்.
கடந்த 200 ஆண்டுகாலமாக ஏராளமானோர்க்கு ஆதரவு அளிக்கும் இடமாக இந்த தேவாலயம் விளங்கி வந்தது. விரிவாக்கப் பணிக்காக அதனை இடிக்காமல் தனித்துவ நடவடிக்கையாக 26 மீட்டர் தள்ளி, தேவாலயத்துக்குச் சொந்தமான நிலத்திலேயே மீண்டும் நிறுவி இருப்பது மக்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.
இது போர்த்துகீசிய கட்டடப் பாணியில் கட்டப்பட்டது என்று தேவாலயத்தின் பொருளாளர் பி.சி.ஆண்டனி தெரிவித்துள்ளார்.

