புதுடெல்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமது எட்டு நாள், ஐந்து நாடுகளுக்கான வெளிநாட்டுப் பயணத்தை புதன்கிழமை (ஜூலை 2) தொடங்கினார். பத்து ஆண்டுகளில் அவரது மிக நீண்ட வெளிநாட்டுப் பயணமான இதில், பிரேசிலில் நடைபெறும் முக்கிய பிரிக்ஸ் உச்சநிலை மாநாட்டில் பங்கேற்பதுடன், ‘உலகளாவிய தெற்கின்’ பல முக்கிய நாடுகளுடன் இந்தியாவின் உறவுகளை பிரதமர் மோடி விரிவுபடுத்தவுள்ளார்.
அவரது பயணம் இரண்டு கண்டங்களை உள்ளடக்கியது. கானா, டிரினிடாட் அண்ட் டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய நாடுகளுக்கு அவர் செல்கிறார்.
பிரதமர் மோடி, 2015 ஜூலையில் ரஷ்யா, ஐந்து மத்திய ஆசிய நாடுகள் உட்பட ஆறு நாடுகளுக்குச் சென்றதே அவரின் கடைசி எட்டு நாள் பயணமாகும். இந்நிலையில், இந்தப் பயணம் தற்காப்பு, அரியவகை கனிமங்கள், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு உள்ளிட்ட பிரச்சினைகளில் கவனம் செலுத்தும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதன்கிழமை கானாவில் தொடங்குகிறது
புதன்கிழமை (ஜூலை 2) முதல் நாளில் கானாவிற்குப் புறப்படுவதன் மூலம் பிரதமர் மோடி தமது பயணத்தைத் தொடங்கினார். இது, கானாவிற்கான அவரது முதல் இருதரப்புப் பயணம் ஆகும்.
கானா, மேற்கு ஆப்பிரிக்காவின் வேகமாக வளர்ந்துவரும் பொருளியல்களில் ஒன்றாகும். கானா ஏற்றுமதிகளுக்கு இந்தியா மிகப்பெரிய இலக்காகும். கானாவிலிருந்து இந்தியாவின் இறக்குமதிகளில், தங்கம் 70 விழுக்காட்டுக்கும் அதிக பங்கு வகிக்கிறது.

