அகமதாபாத்: இந்தியாவின் குஜராத் பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் வெளிநாட்டு மாணவர்கள் ஐவர் சனிக்கிழமை (மார்ச் 16) இரவு தாக்கப்பட்டனர்.
அவர்கள் தங்கள் அறையில் தொழுதுகொண்டிருந்தபோது இன்னொரு சமயத்தைச் சேர்ந்தவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சமய வாசகங்களை முழங்கியதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, இரு பிரிவினருக்கு இடையேயும் வாக்குவாதம் எழுந்து, பின் சண்டை மூண்டது.
இரு குழுவினரும் தாக்கிக்கொண்டதில் மாணவர்கள் ஐவர் காயமுற்றனர்.
குஜராத் பல்கலைக்கழக மாணவர் விடுதியில் வெளிநாட்டு மாணவர்கள் தங்கியிருக்கும் கட்டடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
சம்பவம் குறித்து விவரித்த ஆப்கானிஸ்தான் மாணவர் ஒருவர், “இரவு 11 மணியளவில், வெளியிலிருந்து 10-15 பேர் எங்கள் விடுதி வளாகத்திற்குள் வந்தனர். அவர்களில் மூவர் எங்கள் விடுதிக்குள் நுழைந்தனர். அப்போது நாங்கள் தொழுதுகொண்டிருந்தோம். நாங்கள் தொழுகை நடத்த அனுமதியில்லை என்ற அவர்கள், தங்கள் சமயம் சார்ந்து முழக்கமிட்டனர்.
“எங்கள் விடுதிப் பாதுகாவலரைத் தள்ளிவிட்ட அவர்கள், பின்னர் தொழுகையில் ஈடுபட்டிருந்தோரைத் தாக்கினர். முஸ்லிம் அல்லாத மற்ற மாணவர்கள் எங்களுக்கு உதவ வந்தபோது, அவர்களும் தாக்கப்பட்டனர். அவர்களின் அறைகள் சூறையாடப்பட்டன. மடிக்கணினிகள், கைப்பேசிகள், கண்ணாடிகள் சேதமடைந்தன. தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இருவர், ஆப்கானிஸ்தான், இலங்கை, உஸ்பெகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் என ஐந்து மாணவர்கள் காயமுற்றனர்,” என்று விவரித்தார்.
தாக்குதலில் ஈடுபட்ட வெளியாள்கள் தப்பியோடிய பிறகு காவல்துறையினர் அங்கு வந்ததாகவும் அம்மாணவர் சொன்னார்.
வெளிநாட்டு மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்த காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. குறைந்தது ஐந்து வாகனங்கள் சேதமுற்றதைக் காணொளிகள் காட்டின என்று இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி கூறுகிறது.
இதனையடுத்து, விவகாரத்திற்குத் தீர்வுகாண குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி, உடனடியாகக் காவல்துறை உயரதிகாரிகளுடன் கலந்து பேசியதாக அதிகாரி ஒருவர் சொன்னார்.
இதனிடையே, காயமடைந்த ஐந்து மாணவர்களில் ஒருவர் மட்டும் இன்னும் சிகிச்சை பெற்று வருவதாகவும் மற்ற நால்வரும் சிகிச்சை முடிந்து விடுதிக்குத் திரும்பிவிட்டதாகவும் அகமதாபாத் நகரக் காவல்துறை கூடுதல் ஆணையர் நீரஜ்குமார் பத்குஜார் தெரிவித்தார்.