லக்னோ: திடீர் வெடிவிபத்து காரணமாக, அயோத்தி நகரில் உள்ள ஒரு வீடு இடிந்து தரைமட்டமானது. இதில் 5 பேர் உயிரிழக்க நேரிட்டது.
அயோத்தியில் உள்ள பாக்லா பாரி என்ற கிராமத்தில் இருந்த அந்த வீட்டில் இருந்த மர்மப்பொருள் ஒன்று வியாழக்கிழமை திடீரென வெடித்துச் சிதறியது.
அப்போது எழுந்த பெரும் சத்தத்தைக் கேட்டு அப்பகுதி மக்கள் அந்த வீட்டின் முன் கூடினர். ஆனால், அங்கு ஒரு கட்டடம் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் அந்த வீடு தரைமட்டமாகியது.
தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புப் படையினர் மேற்கொண்ட முயற்சியால் சிலர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் காயமடைந்த சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
காவல்துறை விசாரணை நடத்திவரும் நிலையில், வீட்டுக்குள் வெடித்த மர்மப்பொருள் என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு இன்னமும் விடை கிடைக்கவில்லை என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.