புனே: கால்நடைக் கழிவுகள் கொட்டப்படும் குழிக்குள் விழுந்த பூனையைக் காப்பாற்றுவதற்காக அதனுள் இறங்கிய ஐவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவம் செவ்வாய்க்கிழமையன்று (ஏப்ரல் 9) இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், அகமது நகர் மாவட்டத்தில் நிகழ்ந்தது.
அங்குள்ள வாகடி எனும் சிற்றூரில் செவ்வாய்க்கிழமை மாலை இச்சம்பவம் நிகழ்ந்தது. நள்ளிரவைக் கடந்த பின்னரே குழிக்குள்ளிருந்து அந்த ஐவரின் உடல்களை மீட்க முடிந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
“சாண எரிவாயு தயாரிப்பதற்காக அக்குழிக்குள் கால்நடைக் கழிவுகள் கொட்டி வைக்கப்படுவது வழக்கம். அக்குழிக்குள் விழுந்த பூனையை மீட்பதற்காக அதனுள் இறங்கிய ஒருவர் சாணக் குவியலில் சிக்கிக்கொண்டார்.
“அவரை மீட்பதற்காக ஒருவர் பின் ஒருவராக மேலும் ஐவர் குழிக்குள் இறங்கினர். அவர்களும் உள்ளேயே சிக்கிக்கொண்டனர்,” என்று நிவாசா நகரக் காவல் நிலைய ஆய்வாளர் தனஞ்சய் ஜாதவ் தெரிவித்தார்.
“இரவு 12.30 மணியளவில் அவர்களின் உடல்களை மீட்டோம். பின்னர் அவற்றை உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம்,” என்று அவர் சொன்னார்.
ஐவர் மாண்டுவிட்ட நிலையில் ஒருவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.