திருவனந்தபுரம்: வயநாட்டில் மனித வேட்டையில் ஈடுபட்டுள்ள புலியைப் பிடிக்க சிறப்புக் குழு அமைக்கப்பட்டது.
கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் மனந்தவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராதா. இவர் அங்கு உள்ள பிரியதர்ஷினி எஸ்டேட் என்ற காபி தோட்டத்தில் தொழிலாளராக பணிபுரிந்தார்.
வெள்ளிக்கிழமை காலை காபி இலைகளை பறிக்கச் சென்றபோது, தோட்டத்தில் பதுங்கியிருந்த புலி ராதாவைத் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புலியை உயிருடனோ அல்லது கொன்றோ பிடிக்கும் வரை, உயிரிழந்த ராதாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல முடியாது என காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், வயநாட்டில் மனித வேட்டையாடும் புலியைப் பிடிக்க சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. பஞ்சரக்கொல்லியில் ஜனவரி 27ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, கேரளா வனத்துறையினர் கால்நடை மருத்துவ குழுவுடன் தனிக்குழு அமைத்து புலியைப் பிடிக்க கூண்டு அமைத்து கண்காணித்து வருகின்றனர். இந்தக் குழுவை தலைமை வன கால்நடை அதிகாரி டாக்டர் அருண் சக்கரியா வழிநடத்துகிறார்.