பாட்னா: முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்சிபி சிங், புதிதாகத் தொடங்கிய தமது ஆப் சாப்கி ஆவாஸ் (ஏஎஸ்ஏ) எனும் கட்சியை, அரசியல் உத்தி திட்டமிடல் நிபுணரான (political strategist) பிரசாந்த் கிஷோர் தொடங்கிய ஜான் சுராஜ் கட்சியுடன் இணைத்துக்கொண்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (மே 18) நிகழ்ச்சி ஒன்றில் திரு சிங், தமது கட்சியை ஜான் சுராஜ் கட்சியுடன் இணைப்பதாக அறிவித்தார். எதிர்வரும் பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலில் எல்லா 243 தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக ஜான் சுராஜ் முன்னதாக அறிவித்திருந்தது. இப்போது ஏஎஸ்ஏ கட்சியுடனான இணைப்பு, அதற்கு நற்செய்தியாக அமையும் என்று நம்பப்படுவதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
முன்னாள் ராஜ்ய சபா உறுப்பினரான திரு சிங், நாலந்தா மாவட்டத்தைச் சேர்ந்தவர். பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமாரும் அந்த மாவட்டத்தைச் சேர்ந்தவராவார்.
திரு நிதீஷ் குமாருக்கு இருக்கும் வரவேற்பு குறைந்துவருகிறது. அவரின் உடல்நலம் குறித்த கவலை, கணிக்க முடியாத அவரின் நடத்தை ஆகியவை அதற்கான முக்கியக் காரணங்கள் எனக் கூறப்படுகிறது.
அப்படியிருக்கையில் திரு சிங், குர்மி சமூகத்தின் தலைவராக வளரக்கூடும் என்று பார்க்கப்படுகிறது.