புதுடெல்லி: அந்தமான், நிக்கோபார் தீவுகளின் தலைநகரான ஃபோர்ட் பிளேர் பெயரை இனிமேல் ஸ்ரீ விஜயபுரம் என்று மாற்றப்போவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
காலனித்துவ முத்திரையிலிருந்து தேசத்தை விடுவிக்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வை அடிப்படையில் போர்ட் பிளேரை ‘ஸ்ரீ விஜயபுரம்’ எனப் பெயர் மாற்ற முடிவு செய்துள்ளோம் என இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பதிவில் கூறியிருந்தார்.
மேலும், “ஸ்ரீ விஜயபுரம் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் அடைந்த வெற்றியையும் அதில் அந்தமான், நிக்கோபார் தீவுகளின் தனித்துவமான பங்கையும் குறிக்கிறது. ஏனெனில், சுதந்திரப் போராட்ட வரலாற்றில் அந்தமான், நிக்கோபார் தீவுகளுக்கு இணையில்லாத இடம் உள்ளது,” என்றார் அவர்.
“சோழப் பேரரசின் கடற்படைத் தளமாக இருந்த தீவுப் பகுதி இப்போது இந்தியாவின் வளர்ச்சித் தளமாக மாறி உள்ளது. நேதாஜி சுபாஷ் சந்திர போசால் இந்திய மூவண்ணக்கொடி முதல்முறையாக பறக்க விடப்பட்ட இடமும் வீர் சாவர்க்கர் மற்றும் பிற சுதந்திரப் போராளிகள் சுதந்திர தேசத்திற்காகப் போராடியபோது சிறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த இடமும் இதுதான்,” எனத் தன் பதிவில் அமித் ஷா தெரிவித்திருந்தார்.


