போபால்: மத்தியப் பிரதேச மாநிலம், சிங்ராலி மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டின் கழிவுநீர்த் தொட்டியில் இருந்து நான்கு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ள இச்சம்பவத்துக்கு கொலைப் பின்னணி காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஷிவ் குமார் வர்மா தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், “கழிவுநீர்த் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக உள்ளூர்வாசி ஒருவர் பார்கவான் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்ததை அடுத்து, தொட்டியில் கிடந்த நான்கு உடல்களை காவலர்கள் மீட்டனர்.
“இறந்தவர்களில் ஒருவர் அந்த வீட்டின் உரிமையாளர் ஹரி பிரசாத் பிரஜாபதியின் மகன் சுரேஷ் பிரஜாபதி (30), மற்றொருவர் கரண் ஹல்வாய் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
“மற்ற இரண்டு உடல்களும் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
“முதற்கட்ட விசாரணையின்படி, சுரேஷ் மற்றும் கரண் ஆகியோர் தங்கள் நண்பர்களுடன் ஜனவரி 1ஆம் தேதி வீட்டிற்கு விருந்துக்கு வந்திருந்ததாகக் கூறப்படுகிறது.
“அவர்கள் இருவரையும் கொன்று கழிவுநீர்த் தொட்டியில் வீசியிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது,” என்று காவல் கண்காணிப்பாளர் ஷிவ் குமார் கூறினார்.

