தைவானின் ஃபாக்ஸ்கான் நிறுவனம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து இந்தியாவின் பெங்களூரில் அமையும் ஆலையில் ஐபோன்களைத் தயாரிக்கவிருக்கிறது.
அந்த ரூ.13,600 கோடித் திட்டத்தின்மூலம் 50,000 வேலைகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்று கட்டங்களாக அந்த ஆலைப் பணிகளை முடிக்க ஃபாக்ஸ்கான் திட்டமிட்டுள்ளது. மூன்று கட்டப் பணிகள் முடிந்ததும் அப்புதிய ஆலை ஆண்டிற்கு 2 கோடி ஐபோன்களைத் தயாரிக்க இலக்கு கொண்டுள்ளது.
தேவனஹள்ளியில் அமைக்கப்படும் அந்த ஆலைக்காக கர்நாடக மாநில அரசாங்கம் 300 ஏக்கர் நிலத்தை அடையாளம் கண்டுள்ளது. வரும் ஜூலை 1ஆம் தேதி அந்த நிலப்பகுதி ஃபாக்ஸ்கான் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் என்று மாநிலத் தொழில்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி பதவியேற்று சில வாரங்களே ஆகின்றன.
இந்நிலையில், அந்த ஆலையில் பணியமர்த்தப்படவிருக்கும் ஊழியர்களுக்கு என்னென்ன திறன்களும் தேர்ச்சிகளும் தேவை என்பது குறித்து விரிவான அறிக்கை வழங்கும்படி மாநில அரசு ஃபாக்ஸ்கான் நிறுவனத்திடம் கேட்டுள்ளது.
அதன்படி, அங்கு பணிபுரிய தகுதிபெற்றிருக்கும் வகையில் பயிற்சி வகுப்புகளை நடத்த அரசாங்கம் நடவடிக்கைகள் எடுக்கும் என்று அமைச்சர் பாட்டீல் தெரிவித்துள்ளார்.